அரசியல் கைதிகள்-பினாயக் சென்-அ.மார்க்ஸ்: ஒரு எச்சரிக்கைக் குறிப்புமருத்துவர் பினாயக் சென்னை விடுதலைச் செய்யக் கோரி மனி உரிமை ஆர்வலர்கள் குரல் கொடுத்துள்ளனர். நோபல் பரிசு பெற்றவர்கள் பலர் உட்பட பல்வேறு தரப்பிலிருந்து அவர் விடுதலைச் செய்யப் பட வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தப்படுகிறது. பினாயக் சென் வன்முறைக்கு ஆதரவாக இருந்தவர் அல்ல. அவர் மருத்துவர், மனித உரிமை ஆர்வலர் என்ற முறையில் செயல்பட்டவை அனைத்தும் நியாயமானவை. உச்சநீதி மன்றம் டிசம்பர் 10ம் தேதி அவரது பிணை மனுவை நிராகரித்தது ஒரு துரதிருஷ்டம். இப்போது அஜய் என்பவரையும் கைது செய்துள்ளார், சல்வா ஜுடும் குறித்து கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன. அது குறித்த வழக்கொன்றும் உச்சநீதி மன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறது.
மே மாத தீராநதியில் அ.மார்க்ஸ் தன் கட்டுரையில் சிலவற்றை முன் வைத்துள்ளார். பினாயக் சென்னின் கைது, வழக்கு குறித்து எழுதியுள்ள அவர் இந்தியாவில் அரசியல் கைதிகள் என்பது குறித்தும் எழுதியிருக்கிறார். அக்கட்டுரையில் தமிழ் நாட்டில் 166 பேர் அரசியல் கைதிகளாக உள்ளதாக குறிப்பிடுகிறார்.
“தமிழகத்தில் இன்று கிட்டத்தட்ட 166 அரசியல்-கைதிகள் உள்ளனர். ராஜீவ்காந்தி கொலை வழக்கிலுள்ளவர்கள் தவிர, மாவோயிஸ்டுகள் சுமார் 10 பேர், பொழிலன் உள்பட்ட தேசிய இன விடுதலை இயக்கத்தினர் சுமார் 10, மீதமுள்ள சுமார் 136 பேர் முஸ்லிம்கள். பத்தாண்டுகள் கழித்த ஆயுள் கைதிகள் சுமார் 500 பேர் வரை அண்ணா பிறந்தநாளில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். அரசியல்-கைதிகளுக்கு மட்டும் இந்தச்சலுகை வழங்கப்படவில்லை.”அவர்களில் எத்தனை பேர் தண்டனைக் கைதிகள், எத்தனை பேர் விசாரணை கைதிகள் என்பதை அவர் தெரிவிக்கவில்லை.அரசியல் கைதிகள் என்று வகைப்படுத்தியிருக்கும் முஸ்லீம்களில் எத்தனை பேர் என்னென்ன குற்றச்சாட்டுகளின் கீழ் சிறையிலிருக்கிறார்கள், எத்தனை பேர் நீதிமன்றங்களால் தண்டனை தரப்பட்டவர்கள், எத்தனை பேர் விசாரணைக் கைதிகள் என்பதை அவர் குறிப்பிடவில்லை. அரசியல் கைதிகள் குறித்த அவர் வரையரை என்ன என்பதையும் அவர் குறிப்பிடவில்லை.கட்டுரையில் எழுதியிருப்பதில் பல சர்ச்சைக்குரியவை. எனினும் இந்தக் குறிப்பில் நான் ஒரு சிலவற்றையே விவாதிக்க விரும்புகிறேன்.
சர்வதேச மன்னிப்பு இயக்கம் வன்முறையை ஆதரிப்போர் அல்லது வன்முறையில் ஈடுபட்டோரை அரசியல் கைதிகளை விடுதலை செய்யவேண்டும் என்ற கோரிக்கையின் கீழ் கொண்டு வருவதில்லை. பொதுவாக தங்கள் அரசியல்/கோட்பாடு/நிலைப்பாடுகளுக்காக, மத நம்பிக்கைகளுக்காக சிறையிலிடப்பட்டோரை அரசியல் கைதிகள் என்று கொள்ளலாம். இயக்கங்களும், அரசுகளும் எப்படி யாரை அரசியல் கைதிகளாக வகைப்படுத்துகின்றன என்பதையும் பார்க்க வேண்டும். இயக்கங்களை பொறுத்த வரை ‘விடுதலைப் போருக்காக' செயல்பட்டவர்கள் அரசியல் கைதிகளாக இருக்கலாம், ஆனால் சட்டத்தின் முன் அவர்கள் செய்தது குற்றமாக அறிவிக்கப்பட்டு அவர்கள் தண்டிக்கப்பட்டிருக்கலாம்.
தன்னுடைய வரையரை என்ன என்பதை அ.மார்கஸ் கூறாவிட்டாலும் அவர் குறிப்பிடும் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான மாநாட்டுக் குழு தன்னுடைய பார்வையில் யார் யார் அரசியல் கைதிகள் என்பதைத் தெரிவித்துள்ளது. அகில இந்திய மாநாட்டில் வெளியிடப்பட்ட அறிக்கையின் கடைசி பத்தி கூறுகிறது
“The inaugural conference on political prisoners is a historic and definite step in this direction. Memories of the days of emergency revisit us as a cold reminder. This brings back memories of the days of the anti-colonial struggle, of the valiant resistance of Bahadur Shah against the East India Company and the attendant hanging to death of thousands of Muslims belonging to the slaughter community. It enlivens the spirit of the heroic martyrdom of Bhagat Singh, Rajguru, Sukhdev and Ashfaqullah; of Bhoomaiah and Kishta Goud in Telangana in the 1960s; the memory of Maqbool Bhat being shown the gallows in the 1980s. ”
http://sabrang.com/cc/archive/2008/april08/campaign.html
அந்த முழு அறிக்கையையும் படித்தால் அவர்கள் யார் யாருக்காக குரல் கொடுக்கிறார்கள், யார் யாரை, எந்தெந்த போராட்டங்களை ஆதரிக்கிறார்கள் என்பது தெளிவாகும். இந்தியாவில் லட்சக்கணக்கில் அரசியல் கைதிகள் இருப்பதாக கூறுபவர்கள் பினாயக் சென்னையும், குணங்குடி ஹனீபாவையும்,முகமது அப்சலையும் ஒரே பட்டியலில் சேர்க்கிறார்கள். இதில் உள்ள அரசியல் என்ன? எந்த அடிப்படையில் பினாயக் சென்னும், பொழிலனும், பேரறிவாளனும், முகமது அப்சலும் அரசியல் கைதிகள் எனற ஒரே வகையில் அடங்குவர்.
பகத் சிங்கையும், மக்பூல் பட்டையும் எப்படி ஒரே மாதிரியானவர்கள் என்று கருத முடியும். மக்பூல் பட் தூக்கிலிடப்பட்டார். அவர் செய்தவையும், பகத்சிங் செய்தவையும் ஒரே போன்றவையா இல்லை ஒரே மாதிரியான குறிக்கோள்களுக்காக அவர்கள் செயல்பட்டார்களா. நிச்சயமாக இல்லை. மக்பூல் பட்களை ஆதரிப்பதும், புகழ்வதும் பகத் சிங்கின் தியாகத்தை கொச்சைப்படுத்துவதாகும்.
சுருக்கமாகச் சொன்னால் அரசியல் கைதிகளை ஆதரிப்பது என்ற பெயரில் இந்திய இறையாண்மைக்கும், ஒருமைப்பாட்டிற்கும் எதிராக உள்ள இயக்கங்களை ஆதரிப்பது, அவற்றின் தலைவர்கள், ஆதரவாளர்களை விடுதலைச் செய்யக் கோருவது இந்த மாநாட்டின் நோக்கம். அதில் தொடர்புடையவர்கள் எழுத்தாளர்களாக இருக்கலாம். அதனாலேயே அதன் நோக்கங்கள் ஏற்கத்தக்கவையாகிவிடமாட்டா. இந்த 'உயரிய' நோக்கங்களை அ.,மார்க்ஸ் நேரடியாகவே எழுதி அதையெல்லாம் ஆதரிக்கிறேன் என்று எழுதியிருக்கலாம். ஆனால் அ.மார்கஸ் எதைச் சொல்லவேண்டுமா அதைச் சொல்வதில்லை. எதை ஆதரிப்பதாகச் சொன்னால் வாசகர்கள் ஏமாந்து போவார்களோ அதைச் சொல்கிறார். பினாயக் சென்னை முன்வைத்து அ.மார்கஸ் யார் சார்பாக வாதாடுகிறார் என்பது இப்போது தெளிவாகிறதா?.
அந்த அறிக்கையில் இந்த இயக்கங்கள் நடத்திய/நடத்தும் வன்முறைகளைக் கண்டித்து ஒரு
வார்த்தைக் கூட இல்லை. மக்பூல் பட்டின் இயக்கம் வன்முறை செயல்களில் ஈடுபட்ட
இயக்கம். பட் தண்டிக்கப்பட்டது அவர் செய்த வன்முறை குற்றங்களுக்காக, அரசியல்
நம்பிக்கைகளுக்காக அல்ல. இவர்கள் உதாரணம் காட்டும் மக்பூல் பட் ஒருவர் போதும், இவர்களின் நோக்கம் என்ன என்பதைப் புரிந்து கொள்ள.
கருத்து சுதந்திரத்திற்கு ஆதரவு தெரிவிப்பது என்பது வேறு, அரசியல் கைதிகள் விடுதலை கோரிக்கை என்ற பெயரில் வன்முறையில் ஈடுபட்ட மக்பூல் பட்களை முன்னிறுத்துவோருக்கு ஆதரவு தெரிவிப்பது என்பது வேறு. கருத்து சுதந்திரத்திற்கு இன்று எதிராக இருப்பது அரசு மட்டும்தானா. இந்தியாவிற்குள் ருஷ்டி வரக்கூடாது, தஸ்லீமா இந்தியாவிற்குள் இருக்கக்கூடாது என்று கூறுவது கருத்து சுதந்திரத்திற்கு ஆதரவான நிலைப்பாடா. கருத்து சுதந்திரத்தில் நம்பிக்கையற்ற தமுமுக என்ற அமைப்பினை ஆதரித்துக் கொண்டு, அதனுடன் கூட்டாக செயல்படும் அ.மார்க்ஸ் யாருடைய கருத்து சுதந்திரத்திற்காக யாரை குரல் கொடுக்கச் சொல்கிறார் ?. அவரது வார்த்தைகளை நம்பி ஏமாற வேண்டாம். இந்திய
அரசை விமர்சிப்பது என்பது வேறு, மனித உரிமைக்கு ஆதரவு என்ற பெயரில்
வன்முறை இயக்கங்களுக்கும், தேச விரோத அமைப்புகளுக்கும் ஆதரவு தருவது
என்பது வேறு. அ.மார்க்ஸ் செய்வது பின்னது.
அ.மார்க்ஸின் எழுத்துக்களை, செயல்பாடுகளை பற்றி இங்கு விரிவாக விமர்சிக்கப்ப் போவதில்லை. அவரது எழுத்துக்களை படித்து ஏமாற வேண்டாம். அ.மார்க்ஸ் மனித உரிமை, கருத்து சுதந்திரம் போன்றவை குறித்து பேசினாலும், எழுதினாலும் அதில் உள்ள (அறிவிக்கப்படாத) உள்நோக்கங்களை புரிந்து கொள்ள வேண்டும். இன்று இந்திய விரோத சக்திகள் பல்வேறு பெயர்களில், பல்வேறு நோக்கங்களை முன் வைத்து செயல்படுகின்றன. அவை முன் வைப்பது ஒன்று, ஆனால் உண்மையான நோக்கங்கள் வேறு. அதே போல்தான் அ.மார்க்ஸின் எழுத்துக்களும்,செயல்பாடுகளும்.
இதைப் புரிந்து கொள்ளாதவர்கள் அரசியல் அப்பாவிகளாக இருப்பார்கள் அல்லது ‘எல்லாம் தெரிந்த' மூடர்களாக இருப்பார்கள். மூடத்தனத்தில் நவீன/பின்நவீன மூடத்தனம் என்ற பாகுபாடு இருக்கிறதா என்பது எனக்குத் தெரியாது -:).
Labels: அ.மார்க்ஸ், அரசியல் கைதி, தேச விரோத, பினாயக் சென்